”நம்ம கிட்ட எதுவுமே இல்லை”
இது பெரிய அஜீத். இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ் மையத்தின் முன்னணி ஊழியர்.
ஆக்சிஜன் ஆட்டோக்கள் இது வரை 170 உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறது. தொடங்கிய போது கையில் என்ன இருந்தது?
சிலிண்டர் இல்லை. ஆக்சிஜன் இல்லை. ஆக்சிஜன் மாஸ்க் இல்லை. ஆக்சிஜன் ரெகுலேட்டர் இல்லை. பி.பி.இ கிட் இல்லை. கிளவுஸ் இல்லை. ஆம்புலன்ஸ் பற்றிய அறிவு இல்லை. முக்கியமாக பணம் இல்லை. எதுவுமே இல்லை.
*** ***
இன்று எல்லாம் இருக்கிறது. 170 உயிர்களைக் காப்பாற்ற முடிந்துள்ளது. எப்படி முடிந்தது?
”கேளுங்கள் தரப்படும்” என்கிறார் அஜீத். ஆம்! மக்களிடம் கேளுங்கள்; தரப்படும்.
முதல் ஆக்சிஜன் சிலிண்டரைக் கொடுத்தது ஒரு மாற்றுத் திறனாளி. பி.பி.இ கிட்டை கொடுத்தது சுடுகாட்டு ஊழியர். திருச்சியில் இருந்து ஒரு குழந்தை போன் செய்தது. நம்பிக்கை கொடுத்தது.
**** ***
அஜீத்துக்கு கொடுக்கப்பட்ட இலக்கு 3000 ரூபாய். நண்பர்களிடம் பேசினார். 100, 200 என்று கொடுத்தார்கள். நான்கு நாட்களில் 13,500 திரண்டது. இன்னும் முடியவில்லை. அஜீத்தின் நண்பர்கள் அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் திரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அஜீத்தின் முகத்தில் புன்னகைப் பூக்கிறது.
“இலவச ஆட்டோ ஆக்சிஜன் இப்போ மக்கள் கிட்டே போயிடுச்சு. மக்கள் கைவிட மாட்டாங்க.”
“வுட்ர மாட்டோம்”
-பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)

Comments
Post a Comment