”நான் எதுவுமே செய்யலை”
இவர் சதீஷ். ஆக்சிஜன் ஆட்டோ போராளி. அழைப்பு வந்ததும் அத்தனை விரைவாக செல்வார். திணறும் நெஞ்சங்களுக்கு ஆக்சிஜன் தருவார். தவிக்கும் இதயங்களுக்கு ஆறுதல் தருவார்.
இது வரை இவர் காப்பாற்றியது? 21 உயிர்கள்.
ஆனால், இப்படி சொல்கிறார். “நான் எதுவுமே செய்யலை”
*** ***
துடிதுடிக்கும் நோயாளிகள். பதைபதைக்கும் சொந்தங்கள். ஆக்சிஜன் கொடுக்கும் அருமையான நிமிடங்கள். மருத்துவமனைகளில் நீண்ட வரிசைககள். இடம் கிடைக்காத அலைகழிப்புக்கள். அட்மிசனுக்கான போராட்டங்கள். இறுதியாக நன்றிப் பெருக்குகள். காலில் விழும் குடும்பங்கள்.
எதைப் பற்றியும் இவர் சொல்வதில்லை.
**** ***
நிழல் தரும் மரம் தன் வலிகளைச் சொல்வதில்லை. வெயிலில் வதங்கி நிழலைப் பரப்பும். வெப்பம் தாங்கி .குளிரைச் சுரக்கும்.
வெயிலில் வாடும் உயிர்கள் நிழலின் அருமையைப் பாடும். 21 குடும்பங்கள் சதீஷின் சேவையை வாழ்த்தும்.
*** ***
விடை பெறும் போது சதீஷ் அமைதியைக் கலைக்கிறார்.
“வசதியானவங்களுக்கே ஆஸ்பிட்டல்ல இடம் கிடைக்கிறதுல்லை….”
அப்போ ஏழைகளுக்கு? கேள்வி தொக்கி நிற்கிறது.
அவர் கண்களில் வேதனை வழிகிறது. நம் இதயத்தைப் பிசைகிறது. இன்னும் முடியாத போராட்டம் நம்மையும் அழைக்கிறது.
“வுட்ர மாட்டோம்”
-பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)


Comments
Post a Comment