இன்று பாவேந்தர், புரட்சிக்கவிஞர் என போற்றப்படும் பாரதிதாசன் அவர்களின் 131 வது பிறந்தநாள். தமிழ் தெரிந்த எல்லோருக்கும் பாரதிதாசனை தெரியும், பாரதிதாசனை பிடித்த எல்லோருக்கும் தமிழை பிடிக்கும். அவர் உலகை நேசித்த கவிஞர், மனிதகுலத்தின் ஒவ்வொரு முன்னேற்றத்துக்கும் மகிழ்ச்சியாகி கவிதை புனைந்தவர், மனிதகுல மான்பின் மீதான ஒவ்வொரு தாக்குதலுக்கும் கோவப்பட்டு கவிதை முழங்கியவர். கம்பீரமான நடை, கணீரென்ற குரல், மேடை அதிர கவிதை பாடுவார் பாரதிதாசன், கவிதைகளெல்லாம் யாப்பு நடையில் இருந்தபோதும் மக்களின் மனதை கிளரும்படி எளிய நடையில் கவிதை பாடுவார். அவர் சுதந்திரத்தை விரும்பியவர், சுதந்திர ஏக்கத்தில் எழுதுகிறார்: “ தித்திக்கும் பழம் தின்னக் கொடுப்பார்; மதுரப் பருப்பு வழங்குவார் உனக்கு; பொன்னே, மணியே என்றுனைப் புகழ்வார்; ஆயினும் பச்சைக் கிளியே அதோபார்! உன்னுடன் பிறந்த சின்ன அக்கா, வான வீதியில் வந்து திரிந்து தென்னங் கீற்றுப் பொன்னூசல் ஆடிச் சோலை பயின்று சாலையில் மேய்ந்து வானும் மண்ணுந்தன் வசத்திற் கொண்டாள்! தச்சன் கூடுதான் உனக்குச் சதமோ? அக்கா அக்கா என்றுநீ அழைத்தாய். அக்கா வந்து கொடுக்கச் சுக்கா மிளகா ச...