”வியாசர்பாடியில கொலை தான பன்ணுவாங்க. உயிரைக் காப்பாத்துவாங்களா” கேட்பது ஜி.எச் மார்ச்சுவரி அதிகாரி.
குட்டி அஜித்தின் நெஞ்சில் கோபம். வார்த்தைகளில் நிதானம்.
“வியாசர்பாடியில பொறந்தா நல்லது பண்ணக் கூடாதாண்ணா”
*** ***
சிறிது நேரம் முன்பு நடந்தது இது. அஜித் ஒரு கோவிட் நோயாளியை ஜி.எச்-க்கு அழைத்து வருகிறார். ஆட்டோ ஆம்புலன்சை வரிசையில் நிறுத்துகிறார். நோயாளியை அட்மிட் செய்ய சில மணி நேரம் ஆகலாம். செல்பேசியில் ஆட்டோவைப் படம் பிடிக்கிறார்.
”டேய் போட்டோ எடுக்காதடா. யார்ரா நீ” மார்ச்சுவரி அதிகாரி தடுக்கிறார். இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையைப் பற்றி விளக்குகிறார் அஜித்.
ஆட்டோ எப்படி ஆம்புலன்ஸ் ஆனது? அதிகாரிக்கு ஆச்சரியம்.
இது வியாசையில் எப்படி நிகழ்ந்தது? அதிகாரிக்கு அதிர்ச்சி.
*** ***
“வியாசர்பாடியில பொறந்தா நல்லது பண்ணக் கூடாதாண்ணா”
அஜித்தின் கேள்விக்கு அதிகாரியிடம் பதில் இல்லை. சமாளிக்கிறார், “நல்லது. முதல்ல உன் ஸ்லாங்கை மாத்து”.
“நான் பொறந்ததுக்கு அது தாண்ணா அடையாளம்”
அதிகாரி மௌனமாகிறார். அங்கு இருந்த மற்றொரு அதிகாரி அஜித்துக்கு கை கொடுக்கிறார். வாழ்த்துகிறார். “சூப்பர்ப்பா. நல்லா பண்ணுங்க.”
காற்று வீசுகிறது. கொன்றை மரம் சில பூக்களை உதிர்க்கிறது.
“வுட்ர மாட்டோம்”
-பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)

Comments
Post a Comment