”மூச்சு விட முடியவில்லை. தயவு செஞ்சு வர முடியுமா?”
அழைப்பு வந்தது தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து.
குரலில் இருந்த பதட்டம் நம்மைப் பதற வைக்கிறது. ஆட்டோ ஆம்புலன்ஸ் பாய்கிறது.
தனலட்சுமி என்ற வயதான பெண்மணி. கோவிட் பாசிட்டிவ் நோயாளி.
மருத்துவமனைகளில் இடம் கிடைக்கவில்லை. இப்போது, தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில்
அட்மிஷனுக்காக காத்துக் கிடக்கிறார். அட்மிஷனுக்கு சில மணி நேரம் ஆகலாம். அதற்குள்
மூச்சு முட்டுகிறது.
நாம் சென்ற போது மூச்சுத் திணறிக் கிடந்தார். ஆக்சிஜன் அளவு
பார்த்தோம். 74 என காட்டியது. மிக அபாயமான கட்டம். நமக்குள் நடுக்கம் பாய்கிறது. நிதானப்படுத்திக்
கொள்கிறோம்.
ஆக்சிஜன் மாஸ்க் அணிவித்தோம். அவர் இருந்த காரை விட்டு இறங்க
முடியவில்லை. ஆட்டோவில் இருந்து காருக்கு ஆக்சிஜன் இணைப்பு கொடுத்தோம். அளவை சரியாக
வைத்தோம்.
ஆக்சிஜன் இல்லாமல் துடித்துக் கொண்டிருந்த நெஞ்சுக் கூட்டிற்குள்
உயிர்க் காற்று பாய்ந்தது. உயிரோட்டம் கூடியது. இரண்டு மணி நேர போராட்டம். ஆக்சிஜன்
அளவு 98-க்கு உயர்ந்தது. அவருக்கு மட்டுமல்ல, நமக்கும் உயிர் வந்தது.
அந்தத் தருணத்தில் அவருக்கு அட்மிஷன் கிடைத்து விட்டது. நமது
வேலை முடிந்து விட்டது. விடை பெறும் போது அவரால் பேச முடியவில்லை. கண்கள் பேசின. ”காப்பாற்றி
விட்டீர்கள்! நன்றி.”
”காப்பாற்றுவோம்” “வுட்ர மாட்டோம்”
-பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)



Comments
Post a Comment