”ஆஸ்பத்திரிக்கு நீங்க வருவீங்கன்னா, நாங்க வருவோம்”. நம்மை உரிமையுடன் அழைத்தது ஒரு கோவிட் நோயாளியின் குடும்பம்.
ஆக்சிஜன் ஆட்டோவை விரட்டினார் தமிழ்மணி. நின்ற இடம் ஓமந்தூரார் மருத்துவமனை. நோயாளி முதிய பெண்மணி. அவர் முகத்தில் வேதனை; உயிர் பயம். ஆக்சிஜன் அளவு 70. அட்மிஷன் ஆக பல மணி நேரம் பிடிக்கும்.
தமிழ்மணி உற்சாகமாக பேசினார். “அம்மா உங்களுக்கு ஒண்ணும் இல்லை. சீக்கிரம் சரியாயிடுவீங்க”. இரண்டு மணி நேரம் ஆக்சிஜன் பாய்ந்தது. ஆக்சிஜன் அளவு 98-க்கு வந்தது.
”உங்களுக்கு சரியாயிடுச்சு அம்மா”. தமிழ்மணியின் உற்சாகம் அம்மாவையும் தொற்றிக் கொண்டது. கண்களில் நம்பிக்கைச் சுடர் தெரிந்தது. சிகிச்சை பலனளிக்க இந்த நம்பிக்கை அவசியம்.
அம்மாவிற்கு அட்மிஷன் கிடைத்து விட்டது. தமிழ்மணி ஆக்சிஜன் கொடுத்தார். அதை விட முக்கியமாக நம்பிக்கை கொடுத்தார்.
மருத்துவமனைக்குள் செல்லும் முன் அம்மா தெம்பாக சொன்னார். “இப்படி பேசிக்கிட்டு இருந்தாலே நான் நல்லா இருப்பேன் தம்பி.”
”பேசுவோம்” “வுட்ர மாட்டோம்”
-பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)


Comments
Post a Comment