சிரமப்பட்டு மூச்சு விடுகிறார். பெயர் முகமது ஷெரிப். வயது 80. இடம் திரு.வி.க நகர். வாடி வதங்கிக் கிடக்கிறார்.
ஆக்சிஜன் ஆட்டோவை அழைக்கிறார்கள். உடனே வந்து விட்டார் பரத். ஆக்சிஜன் அளவு 78. தொடர்ந்து இறங்கி வருகிறது. ஆக்சிஜன் மாஸ்க் அணிவிக்கிறார். உயிர்க் காற்று பெரியவரின் நெஞ்சுக்குள் பரவுகிறது.
இரண்டு மணி நேரம். மூச்சுத் திணறல் நின்று விட்டது. பெரியவரின் முகத்தில் மெதுவாக உயிர்க் களை அரும்புகிறது. பெரியவரிடம் சிறிது நேரம் அமைதி. பின்னர் குலுங்கி அழுகிறார்.
”ரெண்டு நாள் முன்னாடி உங்களைப் பார்த்து இருந்தா என் பொண்டாட்டியைக் காப்பாத்தி இருக்கலாமே. உங்களைப் பத்தி தெரியாமப் போச்சே ……..”
இரண்டு நாள் முன்னர் அக்சிஜன் கிடைக்காமல் பெரியவரின் மனைவி இறந்து விட்டார். பரத்துக்கு மனம் கலங்குகிறது. பெரியவரைத் தேற்றுகிறார். பெரியவரின் குடும்பத்திடம் இருந்து விடை பெறுகிறார்.
இம்மாதத் தொடக்கத்தில் பரத்துக்கு புதிதாக வேலை கிடைத்தது. அந்த வேலையை பரத் விட்டு விட்டார். அப்போது தன் தாயிடம் பரத் இப்படி சொன்னார்.
”வேலைக்குப் போனா பணம் தான் கிடைக்கும். பணத்தால உயிரைக் காப்பாத்த முடியுமா? நான் ஜனங்களோட உயிரைக் காப்பாத்தப் போறேன்.”
பல உயிர்களைக் காப்பாற்றி விட்டார் பரத்.
”தொடர்ந்துக் காப்பாற்றுவோம்” “வுட்ர மாட்டோம்”
-பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)


Comments
Post a Comment