ஆட்டோ ஆம்புலன்சின் முதல் பயணம்!
ஜுரம், தொண்டை வலி, உடல் வலி, வயிற்றுப் பிரச்சனை
என்ற அறிகுறிகள் பலருக்கு இருக்கிறது. சோதித்தால் கோவிட் பாசிட்டிவ் என வரும். இவர்களில்
15% பேர் மட்டும் தான் மருத்துவமனைகளில் சேர்க்க
வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். 1% பேருக்கு தான் ஆக்சிஜன் தேவைப்படும். 85% பேரை
வீட்டில் வைத்தே குணப்படுத்தலாம்.
ஆனால், இந்த 15% பேரை தக்க சமயத்தில் பரிசோதனை
செய்ய வேண்டும். தக்க சமயத்தில் மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டும். இல்லை என்றால்
உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.
ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் இது சாத்தியம் இல்லை. ஆனால் ஆம்புலன்சுக்கு
கடும் தட்டுப்பாடு. அதன் கட்டணம் உயர்ந்து கொண்டே செல்கிறது. சாதாரண உழைப்பாளி மக்களுக்கு
ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பது மிக சிரமமாகி விட்டது.
இந்தப் பிரச்சனையை நம்மால் தீர்த்து விட முடியாது. இருந்தாலும்
சாதாரண மக்களின் ஆம்புலன்ஸ் தேவையை நிறைவேற்ற நம்மால் முடிந்ததை செய்ய முடிவு செய்தோம்.
வட சென்னைப் பகுதியில் இருந்து தொடங்க முடிவு செய்தோம். வியாசைத் தோழர்களும், சாரலும்
இணைந்து இதை முன்னெடுத்தோம்.
நம்மால் இது முடியாது என்று தான் முதலில் எண்ணினோம். ஆனால்,
நமக்கு உதவ பலர் முன் வந்தனர். அந்த நண்பர்களின் உதவியுடன் முதல் ஆட்டோ ஆம்புலன்ஸ்
ஓடத் தொடங்கி விட்டது.
வியாழக்கிழமை (13.01.2021) அன்று முதல் நோயாளிக்கு உதவி செய்தது.
கும்மிடிப்பூண்டியில் இருந்த ஒரு மூதாட்டிக்கு ஆம்புலன்ஸ் சேவை தேவைப்பட்டது. இவரை
கும்மிடிப்பூண்டியில் இருந்து தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம்.
இவருக்கு கோவிட் சோதனை செய்தோம். முடிவு தெரிய 2 நாட்கள் ஆகும் என்பதால் ஒரு உறவினரின்
வீட்டில் தங்க வைத்துள்ளோம்.
நண்பர்களே ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கி விட்டோம். அடுத்த
பத்து நாட்களுக்குள் மேலும் 5 ஆட்டோ ஆம்புலன்ஸ்களை களத்தில் இறக்கி விட வேண்டும். இதற்காக
நம் சக்திகளைக் குவித்து வேலை செய்வோம்.
நாட்டையும், மக்களையும் “வுட்ராதீங்க” …… “ஆட்டோ ஆம்புலன்ஸ் ஓட்டுவோம்” ”கொரோனாவை விரட்டுவோம்”.
-பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)
-வியாசைத் தோழர்கள்
-சாரல்


Comments
Post a Comment