Skip to main content

இங்கிருந்து தொடங்கலாம்!

 

இங்கிருந்து தொடங்கலாம்!

       மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது நாடு. பெருந்தொற்றால் மடிந்து கொண்டிருக்கிறார்கள் மக்கள். இதயத்தை இழை இழையாக அறுக்கிறது சோகம்.

       ஏதாவது செய்ய வேண்டும் என தோன்றுகிறது. என்ன செய்வது? எங்கிருந்து தொடங்குவது? நீண்ட நேரம் மண்டையை உடைத்துக் கொண்ட பிறகு இப்படி முடிவு செய்தோம். இருக்கும் இடத்தில் இருந்து தொடங்குவோம். இருப்பதைக் கொண்டு தொடங்குவோம்.

Photo credits: istockphotos


       நாங்கள் தேனாம்பேட்டை, மாம்பலம் பகுதிகளில் துரித உணவகங்களில் வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு தெரிந்தவர்கள் யாரெல்லாம் கொரோனா-வால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என பட்டியலிட்டோம். பதினோரு பேர் வந்தனர். இவர்களோடு பேசினோம். இவர்களில் 10 பேர் மிதமான பாதிப்பில் இருக்கிறார்கள். ஒருவர் தீவிர பாதிப்பில் இருந்தார்.

       தீவிர பாதிப்பில் இருந்த ஒருவரை பரிசோதனைக்கு அழைத்துச் சென்றோம். முதல் சோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்தது. அவர் கடுமையான காய்ச்சல், இருமல் என ஒரு வாரத்திற்கும் மேலாக அவதிப்பட்டு இருக்கிறார். இது குறித்து எங்களுக்குத் தெரிந்த மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்றோம். அதன் அடிப்படையில் சி.டி ஸ்கேன் எடுத்தோம். பாசிட்டிவ் என வந்தது. நுரையிரல் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. இவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க முயற்சித்தோம். அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. இறுதியாக தாம்பரம் சானடோரியத்தில் அரசு நெஞ்சக மருத்துவமனையில் சேர்த்தோம். நான்கு நாள் சிகிச்சைக்கு பிறகு படிப்படியாக தேறி வருகிறார்.          

மிதமான பாதிப்பில் இருந்த 10 பேரில் 3 பேர் பரிசோதனை செய்யவில்லை. இவர்களைப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றோம். இவர்களும் பாசிட்டிவ். தற்போது, இந்த 10 பேரும் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மருந்துகள் வாங்கித் தருகிறோம். இவர்களிடம் தொடர்ந்து பேசி நம்பிக்கையூட்டி வருகிறோம். 

வுட்ராதீங்க.....தொடங்குங்க


நாங்கள் தொடங்கி விட்டோம். இருந்த இடத்தில் இருந்தே தொடங்கி விட்டோம். வாருங்கள் நண்பர்களே! நீங்களும் தொடங்கலாம்! இன்றே தொடங்கலாம்! இருக்கும் இடத்தில் இருந்தே தொடங்கலாம்! நமது சிறிய முயற்சிகளால் பெருந்தொற்றை ஒழிக்கலாம்!

நாட்டையும், மக்களையும் “வுட்ராதீங்க” …… “தொடங்குங்க” 

 -பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)-சாரல், தேனாம்பேட்டை  

                                          (07.05.2021)

Comments

Popular posts from this blog

நிழல் தரும் மரம் இலவச ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள் - தொடர் 12

  ”நான் எதுவுமே செய்யலை” இவர் சதீஷ். ஆக்சிஜன் ஆட்டோ போராளி. அழைப்பு வந்ததும் அத்தனை விரைவாக செல்வார். திணறும் நெஞ்சங்களுக்கு ஆக்சிஜன் தருவார். தவிக்கும் இதயங்களுக்கு ஆறுதல் தருவார்.  இது வரை இவர் காப்பாற்றியது? 21 உயிர்கள்.  ஆனால், இப்படி சொல்கிறார். “நான் எதுவுமே செய்யலை”                                                        ***                  *** துடிதுடிக்கும் நோயாளிகள். பதைபதைக்கும் சொந்தங்கள். ஆக்சிஜன் கொடுக்கும் அருமையான நிமிடங்கள். மருத்துவமனைகளில் நீண்ட வரிசைககள். இடம் கிடைக்காத அலைகழிப்புக்கள். அட்மிசனுக்கான போராட்டங்கள். இறுதியாக நன்றிப் பெருக்குகள். காலில் விழும் குடும்பங்கள்.   எதைப் பற்றியும் இவர் சொல்வதில்லை.                                             ...

சல்யூட் - ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள்.

”ஏய் வரிசையில நில்ரா.” இது கம்பெனி செக்யூரிட்டி. அவர் முகத்தில் வெறுப்பு. இடம் கும்மிடிப்பூண்டி. ஆக்சிஜன் நிரப்பும் நிறுவனம். வரிசையில் நின்றவர்களின் வசதி அவர்களின் உடையில் தெரிகிறது.  சற்று குறைவான உயரம். மெலிந்த உடல். அச்சமடைந்த கண்கள். சாதாரண உடை. இது தான் அப்புராஜின் வெளித் தோற்றம். அப்புராஜுக்கு மற்றொரு முகம் உண்டு. வியாசைத் தோழர்களின் முன்னணியாளர். ஆக்சிஜன் ஆட்டோ சேவையின் ரத்த ஓட்டம். தக்க சமயத்தில் ஆக்சிஜன் கொடுத்து 8 உயிர்களைக் காப்பாற்றிய போராளி. “எங்கே இருந்துடா வர்ரே” இது மற்றொரு செக்யூரிட்டி. ”நாங்க வியாசைத் தோழர்கள்.” அப்புராஜ் ஆக்சிஜன் ஆட்டோ சேவையைப் பற்றி விளக்குகிறார். செக்யூரிட்டிகளுக்கு அதிர்ச்சி. ஆட்டோ எப்படி ஆம்புலன்ஸ் ஆனது? கொடிய கொரோனாவை எதிர்க்கும் துணிவு எப்படி வந்தது?                       ***       *** வேலை முடிந்து விட்டது. சிலிண்டர்களை ஆட்டோவில் ஏற்றுகிறார் அப்புராஜ். அவரை நோக்கி அவர்கள் வருகிறார்கள். 4 செக்யூரிட்டிகள். 2 சூப்பர்வைசர்கள். அணி வகுத்து நிற்கிறார்கள்.  மூத்...

வியாசையில் ஒரு குளிர் ஓடை - ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள் , தொடர் - 8

  மலை ஓடை. மலைச் சாரலில் ஓடும். பாறைகள் கசிந்து பெருக்கிய நீர். தெளிந்த நீர். பார்த்தால் மனதுக்கு இதம். கால் நனைத்தால் சுகம் . அது வியாசையில் பாய்கிறது. இலவச ஆக்சிஜன் ஆட்டோ மையத்துக்கு வாருங்கள். அந்த நீரோடையைப் பார்க்கலாம். ஓடையின் பெயர் வீரநரசிம்மன் என்ற வீரா. இலவச ஆக்சிஜன் ஆட்டோ மையத்தின் முதுகெலும்பு. பிரச்சனைகள் வந்தால் கலங்காமல் வழி தேடுவார். பாறைகள் மோதினாலும் தன் வழியை எழுதிச் செல்லும் ஓடை போல. குழப்பங்கள் சூழும் போது தெளிவான முகம் காட்டுவார். தன்னைத் தானே துவைத்துக் கொண்டு தெளிவாகும் ஓடை போல. அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவார். தாகம் தீர்க்கும் ஓடை போல. ஆட்டோ ஆக்சிஜன் மையம் அமைத்த முதல் நாள். இதை செய்ய முடியுமா என்ற நம்பிக்கையின்மை ஒரு பக்கம். எப்படி செய்வது என்ற குழப்பம் மறுபக்கம். அப்போதும் நம்பிக்கையூட்டினார். ஆரம்ப வேலைகளை செய்து காட்டினார். அன்று தகரம் கிழித்து கையில் ரத்தம் சொட்டியது. அப்போதும் முகத்தில் நிதானம்; தெளிவு. ஓய்வில்லாமல் ஓடை போல துள்ளித் தெறிக்கிறார். வாருங்கள் ஓடையோடு பயணிப்போம்.             ...