இங்கிருந்து தொடங்கலாம்!
மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது
நாடு. பெருந்தொற்றால் மடிந்து கொண்டிருக்கிறார்கள் மக்கள். இதயத்தை இழை இழையாக அறுக்கிறது
சோகம்.
ஏதாவது செய்ய வேண்டும் என தோன்றுகிறது.
என்ன செய்வது? எங்கிருந்து தொடங்குவது? நீண்ட நேரம் மண்டையை உடைத்துக் கொண்ட பிறகு
இப்படி முடிவு செய்தோம். இருக்கும் இடத்தில் இருந்து தொடங்குவோம். இருப்பதைக் கொண்டு
தொடங்குவோம்.
நாங்கள் தேனாம்பேட்டை, மாம்பலம்
பகுதிகளில் துரித உணவகங்களில் வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு தெரிந்தவர்கள் யாரெல்லாம்
கொரோனா-வால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என பட்டியலிட்டோம். பதினோரு பேர் வந்தனர்.
இவர்களோடு பேசினோம். இவர்களில் 10 பேர் மிதமான பாதிப்பில் இருக்கிறார்கள். ஒருவர் தீவிர
பாதிப்பில் இருந்தார்.
தீவிர பாதிப்பில் இருந்த ஒருவரை
பரிசோதனைக்கு அழைத்துச் சென்றோம். முதல் சோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்தது. அவர்
கடுமையான காய்ச்சல், இருமல் என ஒரு வாரத்திற்கும் மேலாக அவதிப்பட்டு இருக்கிறார். இது
குறித்து எங்களுக்குத் தெரிந்த மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்றோம். அதன் அடிப்படையில்
சி.டி ஸ்கேன் எடுத்தோம். பாசிட்டிவ் என வந்தது. நுரையிரல் கடுமையாக பாதிக்கப்பட்டு
இருந்தது. இவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க முயற்சித்தோம். அரசு மருத்துவமனைகள்
நிரம்பி வழிந்தன. இறுதியாக தாம்பரம் சானடோரியத்தில் அரசு நெஞ்சக மருத்துவமனையில் சேர்த்தோம்.
நான்கு நாள் சிகிச்சைக்கு பிறகு படிப்படியாக தேறி வருகிறார்.
மிதமான பாதிப்பில் இருந்த 10 பேரில் 3 பேர் பரிசோதனை
செய்யவில்லை. இவர்களைப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றோம். இவர்களும் பாசிட்டிவ். தற்போது,
இந்த 10 பேரும் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கு மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மருந்துகள் வாங்கித் தருகிறோம். இவர்களிடம்
தொடர்ந்து பேசி நம்பிக்கையூட்டி வருகிறோம்.
நாங்கள் தொடங்கி விட்டோம். இருந்த இடத்தில் இருந்தே
தொடங்கி விட்டோம். வாருங்கள் நண்பர்களே! நீங்களும் தொடங்கலாம்! இன்றே தொடங்கலாம்! இருக்கும்
இடத்தில் இருந்தே தொடங்கலாம்! நமது சிறிய முயற்சிகளால் பெருந்தொற்றை ஒழிக்கலாம்!
நாட்டையும், மக்களையும் “வுட்ராதீங்க” …… “தொடங்குங்க”
-பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)-சாரல், தேனாம்பேட்டை
(07.05.2021)


Comments
Post a Comment